» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்கா: பிரதமர் மோடி அறிவிப்பு

சனி 18, மார்ச் 2023 4:33:27 PM (IST)

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பூங்காக்கள் 'பண்ணை முதல் இழை முதல் தொழிற்சாலை முதல் பேஷன் முதல் வெளிநாடு' என்ற பார்வைக்கு ஏற்ப ஜவுளித்துறையை ஊக்குவிக்கும்.

பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித் துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்கும். அத்துடன் கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்ப்பதுடன், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். 'இந்தியாவில் தயாரிப்போம்' மற்றும் 'உலகுக்காக தயாரிப்போம்' திட்டங்களுக்கு இது மிகப்பெரிய உதாரணமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதற்கிடையே, மேற்படி மெகா பூங்காக்கள் ரூ.4,445 கோடி செலவில் அமைக்கப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்து உள்ளார். இந்த பூங்காக்கள் மூலம் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்திருந்த அவர், ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியம், பண்டைய காலத்தில் இருந்து, இந்தியாவை உலகளாவிய முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றும் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலுக்கு தயாராக உள்ளது எனவும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இந்தியா, உலகளாவிய ஜவுளி மையமாக மாறுவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது. முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச வாங்குபவர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத வாய்ப்பாகும்' என வெளியிட்டு இருந்தார். இந்த பூங்காக்கள் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இணைந்துள்ள மேற்படி 7 மாநிலங்களின் மக்களுக்கு வாழ்த்துகளையும் பியூஸ் கோயல் தெரிவித்து இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory