» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழப்பு : பென்ஸ் நிறுவனத்தினர் ஆய்வு
செவ்வாய் 6, செப்டம்பர் 2022 12:01:07 PM (IST)
கார் விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக சொகுசு கார் நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார். விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த துயரம் நேர்ந்தது.
இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் இன்று விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். விபத்து குறித்து போலீஸ் ஐ.ஜி. சஞ்சய் மொகிதே கூறுகையில், "பிரேக்கின் நிலை குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் தகவல்களை சரிபார்போம். இதுபோன்ற உயர்தர வகனங்களில் டயர் அழுத்தம், பிரேக் ஆயில் அளவு போன்ற விவரங்களை பெற முடியும். வாகனத்தின் நிலையை பார்க்கும்போது அது அதிவேகமாக வந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது" என்றார்.