» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் காணொலிப் பள்ளிதொடக்கம்: நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சேரலாம்!

வியாழன் 1, செப்டம்பர் 2022 10:30:53 AM (IST)



நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில், காணொலிப் பள்ளியை (விர்ச்சுவல் ஸ்கூல் - டிஎம்விஎஸ்) டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் கேஜரிவால் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 13 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி அளிப்பதற்கான சேர்க்கை இந்த காணொலிப் பள்ளியின் மூலம் தொடங்கப்படும். மாணவர்கள் திறன் சார்ந்த பயிற்சியுடன் நீட், க்யூட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளுக்காக பயிற்சியும் வல்லுநர்கள் மூலம் அளிக்கப்படும். நாட்டிலேயே முதல் முதலாக இந்தக் காணொலிப் பள்ளி அமைக்கப்பட்டு இருப்பது கல்வித் துறையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். பள்ளிகள் வெகு தொலைவில் இருப்பது, இதர தடைகள் போன்ற பல பிரச்னைகளால் பள்ளிக்கு மாணவர்கள் பலர் செல்ல முடியாத நிலை உள்ளது.

பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் அனுப்ப விரும்பாததால் தங்களது மகள்களுக்கு படிப்பை அளிக்க முடியவில்லை. அவர்கள் கல்வியைப் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்தக் காணொலிப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறோம். கரோனா நோய்த்தொற்று காரணமாக அவசியமாகியுள்ள காணொலி வகுப்புகள் மூலம் இந்தப் பள்ளி ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் பள்ளியின் வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படும். பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தக் காணொலிப் பள்ளி டெல்லி பள்ளிக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்படும். அங்கீகாரமுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 வயது முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்தக் காணொலிப் பள்ளியில் சேர்வதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இங்கு இலவச கல்வி அளிக்கப்படும். நேரலை அல்லாமல் பதிவேற்றப்பட்ட வகுப்புகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்கள் டெல்லிக்கு வந்து தேர்வு எழுதினால் போதும் என்றார்.

நாட்டிலேயே முதல் முறையாக காணொலிப் பள்ளியை டெல்லி அரசுதான் தொடங்கியது என்று முதல்வர் கேஜரிவால் கூறியதற்கு தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) மறுத்துள்ளது. காணொலிப் பள்ளியை கடந்த ஆண்டு மத்திய அரசுதான் முதல்முறையாகத் திறந்தது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory