» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் மின்சார சட்டதிருத்த மசோதா தாக்கல்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 8:34:35 AM (IST)
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஆர்கே சிங் தாக்கல் செய்தார்.
மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ மக்களவையில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் அறிமுகம் செய்துள்ளார். இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த மசோதா தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநில அரசுகள் வழங்கும் இலவச மின்சார திட்டம், மானிய விலை மின்சார திட்டங்கள் போன்ற திட்டங்கள் பாதிப்பை சந்திக்கும் எனவும், உரிய நேரத்தில் மின்சார கட்டணங்களை மாநில அரசுகள் உயர்த்தியே தீர வேண்டும் போன்ற அம்சங்கள் பொதுமக்களுக்கு பாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த திட்டம் மக்கள் நலனுக்கு எதிரானது என ட்விட்டரில் தனது நிலைப்பாட்டை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு முழுவதும் 85 ஆயிரம் ஊழியர்களும், நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மின் துறை ஊழியர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அனைத்து மின்துறை ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
POTHUJANAMAug 9, 2022 - 12:12:02 PM | Posted IP 162.1*****