» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிப்பு!
சனி 6, ஆகஸ்ட் 2022 12:23:41 PM (IST)
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தனர்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிடுகின்றனர். தேர்தலில் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.
இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் எம்பியுமான மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களித்தனர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.