» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் மோடி - புதின் சந்திப்பு : இந்தியா - ரஷிய இடையே ரூ.5,200 கோடிக்கு முக்கிய ஒப்பந்தங்கள்
செவ்வாய் 7, டிசம்பர் 2021 10:53:54 AM (IST)
இந்தியா, ரஷ்யா பங்கேற்ற 21ஆவது உச்ச மாநாட்டில் ரூ.5,200 கோடிக்குப் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் டெல்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளின் அரசியல் மாற்றங்களால் அடிப்படை நட்புறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு நிலைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கரோனா தொற்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தபோதிலும் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று கூறினார்.
நேற்று முன்தினம் இரவு இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் முதற்கட்டமாக சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ராணுவம், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ரஷ்ய தயாரிப்பான நவீன ரக ஏ.கே.203 தானியங்கித் துப்பாக்கிகளை இந்திய ராணுவத்துக்கு வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தானதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஒப்பந்தத்தின்படி ரஷ்யாவிடம் இருந்து சுமார் ஆறு லட்சம் துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்படும். மேலும், ரஷ்ய தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி உள்நாட்டிலேயே இந்த துப்பாக்கி உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. நேற்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். அப்போது, ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தலுக்கான வாய்ப்பு ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.