» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தலிபான்களை சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பீடு: சமாஜ்வாதி எம்.பி., மீது தேச துரோக வழக்கு
வியாழன் 19, ஆகஸ்ட் 2021 8:34:59 AM (IST)
தலிபான் பயங்கரவாதிகளை, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி.,மீது உ.பி., போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆப்கனில் தலிபான் அமைப்பினர் அதிகாரத்தை கைப்பற்றியது தொடர்பாக, உ.பி.,யின் சாம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யான சபிக்குர் ரஹ்மான் பார்க் கூறும்போது,பிரிட்டிஷார், இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஒட்டு மொத்த நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக போராடினர். தற்போது தலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலிமையான எந்த நாடும் தங்கள் நாட்டில் குடியேறாமல் தலிபான்கள் தடுத்திருக்கின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே ஆள விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும்? எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக சம்பால் மாவட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சபிக்குர் ரஹ்மான் பார்க் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி., சர்கேஷ் மிஸ்ரா கூறுகையில், தலிபான்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சபிக்குர் ரஹ்மான் பார்க் மற்றும் இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலிபான்களை, இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர். இதனால், எம்.பி., கருத்து தேச துரோகமாக கருதப்படும் எனக்கூறினார்.
இது தொடர்பாக சபிக்குர் ரஹ்மான் பார்க் கூறுகையில், தலிபான்களை, சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேச வில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. நான் இந்திய குடிமகன். ஆப்கன் குடிமகன் அல்ல. இந்திய அரசின் கொள்கையை ஆதரிப்பவன் என தெரவித்தார்.