» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வீட்டிலேயே கரோனா தொற்றை கண்டறியும் கருவியின் பயன்பாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர்., அனுமதி
வியாழன் 20, மே 2021 11:46:33 AM (IST)
கரோனா தொற்றை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்ட செய்திக் குறிப்பில் "கரோனா தொற்று பாதிப்பு இருப்பதை விரைந்து கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவியை மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு பரிசோதனை கருவியின் விலை 250 ரூபாய். 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். இக்கருவியின் பயன்பாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளித்துள்ளது.
மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து சுய பரிசோதனை மூலம் தொற்று இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கருவியின் பரிசோதனையை எல்லோரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது. கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டோருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம்.
இந்த கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் மீண்டும் பரிசோதனை தேவையில்லை. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டு தனிமை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் தொற்று அறிகுறிகள் இருந்து இந்த கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என, வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.