» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் கரையை கடந்தது டாவ்தே புயல் : கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் பெரும் சேதம்!
செவ்வாய் 18, மே 2021 4:47:43 PM (IST)
அரபிக் கடலில் உருவான அதி தீவிர டாவ்தே புயல் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்றிரவு குஜராத்தில் கரையை கடந்தது. புயலில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகம் மகாராஷ்டிரடித்தில் கனத்தை மழை பெய்தது. இதற்கிடையே புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக சென்று செவ்வாய்க்கிழமை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.
மேலும் இந்த புயல் குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.அதைத் தொடர்ந்து புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந்தநிலையில் அதி தீவி ரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்து குஜராத்தை நோக்கி வேகமாக நகர தொடங்கியது. இதன் காரணமாக ஒருநாள் முன்னதாகவே நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்-மாகுவா இடையே புயல் கரையை கடந்தது. கரையை கடந்த பின் அதி தீவிர புயலாக வலுவிழந்தது.
புயல் கரையை கடக்கும் போது சூறை காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, கன மழை காரணமாக பல இடங்கள் சின்னாபின்னமானது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன. யூனியன் பிரதேசங்களான கோவா மற்றும் டாமன் டையுவும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
நிலைகுலைந்த மும்பை
டாவ்தே புயல் கரையை கடக்கும் முன்பாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் நகர்ந்து சென்றது. இதன் காரணமாக மகாரஷ்டிர தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தலைநகர் மும்பை நிலைகுலைந்து போனது. புயல் தீவிரம் காரணமாக மும்பை விமானநிலையம் மூடப்பட்டது.
பல இடங்களில் மரங்கள் சரிந்தன, கோவிட் மையங்கள், தடுப்பூசி மையங்கள் சேதமடைந்தன. கரையோர பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. டவ்தே புயல் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.