தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என 488 மனுக்களும், மூத்தகுடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் மூத்த குடிமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 17 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடமிருந்து 31 மனுக்கள் என மொத்தம் 536 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, அலிம்கோ சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.9000/- மதிப்பிலான காதொலி கருவியும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1990/- மதிப்பிலான ஊன்றுகோல் ஆக மொத்தம் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10990/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) (பொ) விஜயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.