சி.எஸ்‌ஐ. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் காலியாக உள்ள பேராயர் தெரிவு பட்டியலுக்கான தேர்தல் இன்று செப்டம்பர் 9ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி அளவில் நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் வைத்து நடைபெற்றது.

இத் தேர்தலானது தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. இத் தேர்தல் பணிகளை தூத்துக்குடி-நாசரேத் திருமண்ட லே செயலரும், தேர்தல் குழுத் தலைவருமான எஸ்.டி.கே.ராஜன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கிறிஸ்டோபர் செல்வராஜ், மேக்சிங் ஜான். ஜெபச்சந்திரன், அருள்ராஜா, கரோலின், ஞானராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

இத் தேர்தலில் தூத்துக்குடி-நாசரேத் குருவானவர்கள் 10 பேர் போட்டியிட்டனர். இத் தேர்தலில் குருவானவர்கள், லே பெருமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் பிரதிநிதிகள் என 441 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர்கள் மோசஸ் ஜெபராஜ் 288, டி.ஜி.ஏ.தாமஸ் 284, தேவராஜன் 250, நவராஜ் 237 வாக்குகளும் பெற்று நால்வரும் பேராயர் தேர்வு பட்டியலுக்கு தெரிந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் இத் தேர்தலில் டி.எஸ்.எப். அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர்கள் சாமுவேல் தாமஸ் 149, எட்வின் டேனியல் 84, ஹென்றி ஜீவானந்தம் 78, ராபின்சன் 53 வாக்குகள் பெற்றனர். எந்த அணியையும் சாராமல் போட்டியிட்ட குருவானவர்கள் மனோகரன்104, இம்மானுவேல் பொன்னுதுரை 97 வாக்குகளும் பெற்றனர்.

இதில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட 50 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நான்கு பேரிலிருந்து ஒருவரை பேராயராக சி.எஸ்.ஐ. யின் சினாடு பேரவை தேர்வு செய்கிறது.

எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்டு பேராயர் தேர்வு பட்டியலுக்கு தேர்வான குருவானவர்கள் மோசஸ் ஜெபராஜ், டி.ஜி.ஏ.தாமஸ், தேவராஜன், நவராஜ் ஆகியோரை தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன், லே செயலரும் தேர்தல் குழு தலைவருமான எஸ்.டி.கே. ராஜன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள், பெருமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.