இதுகுறித்து வெளியான அறிக்கையில், "கடந்த 9ஆம் தேதி வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் மருத்துவமனை அறிக்கையால் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார். கூட்டத் தொடர் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவருக்கு கடந்த 9ஆம் தேதி இரவு திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வி.எஸ்.பாபுவை அமைச்சர்கள் மரிய வில்சன், அருண்ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது நன்றாகவும், சீராகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று (Infection) காரணமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
"நுரையீரலில் ஏற்பட்டுள்ள Infection காரணமாக அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி அவரது உடல்நிலை சீராக உள்ளது" என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
வி.எஸ். பாபுவின் உடல்நிலை தொடர்பான மருத்துவமனை அறிக்கை சற்று நேரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் அருண்ராஜ் நேற்று கூறியிருந்தார்.
இதனால், வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து பரவி வரும் தகவல்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

