தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வருமானம் அதிகரிக்காத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும்பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கே செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசு இதனை வெறும் விலை உயர்வாகப் பார்க்காமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்சினையாகக் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களும் எந்தவித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல், நிம்மதியாகவும் கண்ணியமாகவும் நம் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்ற நிலையைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

