» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனெவே மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளிலேயே பணியாளர்கள் இல்லாத நிலையில், "இல்லம் தேடி மருத்துவம்" என்று தி.மு.க. அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில், துணை சுகாதார நிலைய அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாகவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023-ல் வெளியிடப்பட்டதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதுவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் இருக்கத் தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மேற்படி பணியிடங்களை நிரப்பக் கோரி வரும் 27-ம்தேதி முதல் மாலை நேரங்களில் தர்ணா போராட்டம் நடத்தவும், ஏப்ரல் 9-ம்தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
நூறு சதவீதம் பணியிடங்கள் காலியாகும் அளவுக்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது தி.மு.க. அரசு. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால், அறிவிப்பில் உள்ள குறைகளை நீக்கி, நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம். தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை. தி.மு.க. அரசின் நோக்கமே காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திட்டங்களை அறிவித்து விளம்பரத்திலேயே ஆட்சியை நடத்திவிடலாம் என்பதுதான். ஆனால், பொதுமக்கள் கள யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.
"பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏககாலத்தில் ஏமாற்ற முடியாது" என்ற ஆப்ரகாம் லிங்கனின் வரிகளை நினைவுபடுத்தி, காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சனி 29, மார்ச் 2025 4:07:11 PM (IST)

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை: முதல்வர்
திங்கள் 3, மார்ச் 2025 11:37:05 AM (IST)

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!
வியாழன் 20, பிப்ரவரி 2025 4:07:47 PM (IST)
