» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, பிப்ரவரி 2023 5:03:10 PM (IST)
நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினாா்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங் களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார்.
இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சுமாா் 30 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினாா். மேலும், தமிழகம் சாா்ந்த பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக உதயநிதி தெரிவித்தாா்.
அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பா.ஜ.கவுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு- மோதல் நிலவி வரும் சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை தனியாக சென்று சந்தித்து பேசுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு காரணமாக தமிழக அரசுக்கும்- மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் உருவாகும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
JAY RASIKANMar 1, 2023 - 03:59:27 PM | Posted IP 162.1*****