» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தொகுப்பூதிய கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

திங்கள் 5, டிசம்பர் 2022 4:04:11 PM (IST)

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்...

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிய, 2007 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி உதவியாளர்கள் தமிழ்நாடு அரசால் பணியமர்த்தப்பட்டனர். பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் அனைவரும், 15 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னும் இன்றுவரை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நிரந்தரம் வேண்டி கணினி உதவியாளர்கள் முன்னெடுத்த பல்வேறு கட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 22.03.2017 அன்று பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டபோதும், இறுதிவரை பணி நிரந்தரம் செய்யாமல் அதிமுக அரசு வஞ்சித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசினைப் போலவே பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருவது கணினி உதவியாளர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

பணி நிரந்தர அரசாணை வெளியிட்டு ஆறு ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கணினி உதவியாளர்கள் வீதியில் இறங்கி பல்வேறு தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாணை 37 இன் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் முன்னெடுக்கும் தொடர்விடுப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழுமையான ஆதரவினைத் தெரிவிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்போம் என்றும் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

SUN SUNDec 13, 2022 - 04:15:24 PM | Posted IP 162.1*****

சினிமா ஜோக்கர் , இவனுக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது. , முட்டாள்தனமாக பொய்ச்சொல்வதில் கைதேர்ந்தவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory