» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெரியார் நினைவு சமத்துவபுரம்: முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

செவ்வாய் 5, ஏப்ரல் 2022 11:15:55 AM (IST)



கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு சமத்துவபுரம் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கொழுவாரி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. ரூ.2.88 கோடி மதிப்பில் இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் உருவ சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், புதியதாக உருவாக்கப்பட்ட பசுமை தோட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாடினார். வீட்டில் உள்ள வசதிகள் பற்றி கேட்டு அறிந்தார்.

இதனை தொடர்ந்து சமத்துவபுர வளாகத்தில் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேசன் கடை கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.12 லட்சம் செலவில் நூலக கட்டிடம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.42 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு வீட்டின் சாவியையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர இந்த விழாவில் ரூ.24 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள், புதிய கட்டிடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசினார்.

இந்த விழாக்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், எம்.பி.க்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க் கள் புகழேந்தி, லட்சுமணன், மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பம் கிராமத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்துக்கு சென்றார். அங்கு ரூ.500 கோடி மதிப்பில் லோட்டஸ் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்திருந்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory