» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
துபாய் ஓபன் டென்னிஸில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா!
புதன் 22, பிப்ரவரி 2023 3:05:48 PM (IST)
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்து கண்ணீருடன் விடைபெற்றார்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. ஒற்றையர் போட்டியில் பிரகாசிக்காவிட்டாலும், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளில் பட்டங்களை வென்று வந்தார். 6 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் போட்டிகளில் அவர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா கலந்துகொண்டார். ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி கண்டதையடுத்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள துபாய் ஓபன் டென்னிஸ் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கண்ணீருடன் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் துபாய் டூட்டி ப்ரீ ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மாலை மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீயுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கினார் சானியா மிர்சா.
முதல் சுற்று ஆட்டத்தில் சானியா-மேடிசன் கீ ஜோடி, ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மிதோவா- எல்.சம்சோனோவா ஜோடி மோதியது.இதில் வெரோனிகா-சம்சோனோவா ஜோடி 6-4, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் சானியா-மேடிசன் கீ ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து இந்தத் தொடரிலிருந்து சானியா மிர்சா-மேடிசன் கீ ஜோடி வெளியேறியது. தனது கடைசி போட்டி என்பதால் மைதானத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார் சானியா மிர்சா.