» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
களத்தில் டி வில்லியர்ஸ்... அசத்திய புவனேஷ்வர்... - ஹைதராபாத் த்ரில் வெற்றி!
வியாழன் 7, அக்டோபர் 2021 10:27:12 AM (IST)
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் நேற்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
142 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் கோலி. ஆனால், அதே ஓவரில் புவனேஷ்வர் குமாரிடம் அவர் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய டேனியல் கிறிஸ்டியன் 1, ஸ்ரீகர் பரத் 12 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், படிக்கல் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடினார். கிளென் மேக்ஸ்வெல் துரிதமாக ரன் சேர்த்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் 10 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்த பெங்களூருவுக்கு கடைசி 10 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்டன.பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டிய நேரத்தில் கேன் வில்லியம்சனின் பிரமாதமான த்ரோவால் மேக்ஸ்வெல் 40 ரன்களுக்கு (25 பந்துகள்) ஆட்டமிழந்தார். நிதானம் காட்டி வந்த படிக்கல் 41 ரன்களுக்கு (52 பந்துகள்) ரஷித் கான் சுழலில் வீழ்ந்தார்.
கடைசி 3 ஓவர்களில் பெங்களூரு வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டன.இந்த நிலையில் களமிறங்கிய ஷபாஸ் அகமது முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டத் தொடங்கினார்.ஆனால், 19-வது ஓவரை வீசிய ஜேசன் ஹோல்டர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷபாஸ் (14 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. 4-வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடித்தாலும் புவனேஷ்வர் குமார் மீதமுள்ள பந்துகளை சிறப்பாக வீசி கட்டுப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.