» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா பெருமைக் கொள்கிறது: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு!
செவ்வாய் 27, ஜூலை 2021 11:28:36 AM (IST)
இந்தியா உங்கள் முயற்சியை கண்டு பெருமை கொள்கிறது என்று ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்த தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துக் கொண்டார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது சுற்றில் பவானி தேவி தோல்வி அடைந்தார். வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.
தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிடிருந்தார்.இந்த நிலையில் பவானி தேவியை ராகுல் காந்தி பாராட்டி பதிவிட்டுள்ளார். அதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொறு படி..”என்று பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் 1896 ஆம் ஆண்டு வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளையாட்டில் இந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி. கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார்.