» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்கக் கோரிக்கை!

வெள்ளி 19, ஜூன் 2026 10:08:26 AM (IST)

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவிலில் இருந்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவில்: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை விரிவாக்கம் மற்றும் யார்டு மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20666) இரவு நேரப் பராமரிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

தினசரி இரவு 23:00 மணிக்கு திருநெல்வேலி வரும் இந்த ரயில், பயணிகள் இறங்கிய பின் காலிப் பெட்டிகளாக நாகர்கோவில் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள பிட்லைனில் (Pitline) இரவு முழுவதும் பராமரிக்கப்படுகிறது. பின்னர், அதிகாலை 04:00 மணியளவில் மீண்டும் காலிப் பெட்டிகளாக திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து காலை 06:00 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறது. சுமார் ஒரு வார காலத்திற்கு இந்த தற்காலிக ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிலோமீட்டர் கணக்கில் காலிப் பெட்டிகளாக திருநெல்வேலிக்கு இயக்குவதற்குப் பதிலாக, இந்த ரயிலை நாகர்கோவிலில் இருந்தே சென்னைக்கு 'நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத்' ரயிலாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதன் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலைப் பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளோ, இடநெருக்கடியோ இல்லை என்பது தெளிவாகியுள்ளது எனப் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.   இவ்வாறு காலி பெட்டிகளாக இயக்குவதை காட்டிலும் நேரடி ரயிலாக இயக்கும் போது ரயில்வே துறைக்கு வருவாய் கிடைக்கும். இதனால் கூடுதல் செலவுகள் ஒன்றும் ஏற்படுவது இல்லை.

நடைமேடைப் பற்றாக்குறைக்கு எளிய மாற்றுத் திட்டம்: 

இந்த வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து இயக்கப்பட்டால், அதிகாலை 05:00 மணிக்கு புறப்படும் வகையில் கால அட்டவணை அமையக்கூடும். அதற்கு, அதிகாலை 04:30 மணிக்கு ரயிலின் காலி பெட்டிகளை நடைமேடையில் நிறுத்த வேண்டும். தற்போதைய சூழலில் அதிகாலையில் நடைமேடை பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதற்கு ஒரு எளிய தீர்வை பயணிகள் சங்கம் முன்வைக்கிறது.

தற்போது அதிகாலை 04:30 மணிக்குள் கோவை - நாகர்கோவில் ரயில் வந்து சேருகிறது. இந்த ரயிலின் காலிப் பெட்டிகள் காலை 06:25 மணி வரை நாகர்கோவில் நடைமேடையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவில் - கொல்லம் பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது. புதிய நடைமேடைகள் பயன்பாட்டுக்கு வரும் வரை, இந்த கோவை ரயிலை தற்காலிகமாக கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கினால், அதிகாலை 04:30 மணி முதல் 06:25 மணி வரை நிலவும் நடைமேடை நெருக்கடிப் பிரச்சனை முற்றிலும் சரியாகும். அதன் மூலம் காலை 05:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயிலை எளிதாக இயக்க முடியும்.

மக்கள் பிரதிநிதிகளின் மெத்தனம் குறித்து அதிருப்தி: குமரி மாவட்டத்தின் இந்த நியாயமான கோரிக்கையை, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் ஆகியோரிடம் உடனடியாக   வலுவாக எடுத்துரைத்து, இந்த மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.  ஆனால், துரதிர்ஷ்டவசமாக குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள்  ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிப்பதோடு தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்களே  தவிர, ரயில்வே அதிகாரிகள் கூறும் சாக்குப்போக்குகளைக் கேட்டுவிட்டு மெத்தனமாக இருக்கிறார்களே தவிர, திட்டங்களைச் செயல்படுத்த வலுவான அழுத்தம் தருவதில்லை எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

IndianJun 19, 2026 - 11:53:04 AM | Posted IP 162.1*****

Tuticorin to Chennai Vande Bharat service we need.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory