» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதிவாளர் அலுவலகங்கள் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன: அன்புமணி குற்றச்சாட்டு

சனி 7, பிப்ரவரி 2026 5:13:47 PM (IST)

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. கையூட்டு வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுத்து ஏமாந்த ஒருவர், குடிபோதையில் அந்த அலுவலகத்திற்கு சென்று பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி தகராறு செய்யும் காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பதிவாளர் அலுவலகங்கள் தான் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன என்பதை இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.

திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறு செய்தவரின் பெயர் குப்பன் என்றும், வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி கையூட்டுக் கொடுத்து காரியங்களை சாதிப்பவர் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அவருக்கு காரியம் சாதித்து தருவதாக கையூட்டு வாங்கிய அதிகாரிகள், அதை செய்து தராததன் காரணமாகவே தகராறு செய்ததாகவும் தெரிகிறது.

குடிபோதையில் திளைக்கும் ஒருவர் எந்த தயக்கமும் இல்லாமல் அரசு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவாளர் இருக்கையில் கம்பீரமாக அமருகிறார்; அவரைத் தடுப்பதற்குக் கூட எவரும் முயலவில்லை என்பதிலிருந்தே, அந்த அலுவலகத்தில், அவரும், அவர் கொடுக்கும் கையூட்டும் எந்த அளவுக்கு ராஜ்ஜியம் நடத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது. அதற்கு காரணம் அமைச்சர்கள் நிலையிலிருந்து அதிகாரிகள் நிலை வரைக்கும் ஊழலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

திமுக அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஊழலும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒன்னும் ஒரிரு வாரங்களில் பதவிக்காலம் முடிவடைவதற்கும் என்னென்ன அவலங்கள் நடக்குமோ? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory