» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)
"எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்” என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக வந்த டி.கே.சிவகுமார், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "நான் இங்கே தமிழக முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூட்டாட்சி அமைப்பையும், அரசமைப்பையும் பேணுவதை எண்ணிப் பெருமைப்படுகிறோம். இப்படி இங்கே ஒன்றுகூடுவது என்பது ஒரு தொடக்கம்.
இன்று இந்த விவகாரத்தில் அடுத்தது என்னவென்பது பற்றி ஆலோசிப்போம். நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். தெலங்கானா, பஞ்சாப், கேரளா முதல்வர்கள் ஏற்கனவே வந்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எங்கள் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக நின்று எங்கள் மாநிலங்களின் தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வோம்.
நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல. எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கட்டவிழ்க்க முயற்சிக்கிறது. நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்.” என்றார்.
‘திஹார் சிறைக்கு அனுப்பினால் கூட..’ தொடர்ந்து அவரிடம் தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகுமார், "அவர் எங்கள் மாநிலத்தில் அரசு அதிகாரியாக செயல்பட்டவர். இன்று அவர் வேறு ஒரு பாதையில் பணி செய்கிறார். அவர் பணியை அவர் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன். அவர்கள் என்னை திஹார் சிறைக்கு அனுப்பினால் கூட நான் அஞ்சமாட்டேன்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










