» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப்-1, குரூப்-4 தேர்வு அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்

செவ்வாய் 18, மார்ச் 2025 11:21:45 AM (IST)

குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்தார்.

2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் வெளியிடப்படும்போதே காலியிடங்களின் எண்ணிக்கையும் தோராயமாக தெரிவிக்கப்படும். 

ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று காலியிடங்களின் விவரம் குறிப்பிடப்படவில்லை. இதனால் தேர்வர்கள் திட்டமிட்ட படி தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அந்த வகையில், குரூப்-1 தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் அதில் குறிப்பிடப்படும்.

தற்போது தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும். எனவே, விடைத்தாள் பக்கத்தை தேர்வர்கள் எந்தவிதமான சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல் மிக எளிதாக பூர்த்தி செய்ய முடியும். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை அமைந்திருக்கும். தேர்வு முடிவுகளை விரைவாகவும் அதேநேரத்தில் சிறு தவறு கூட இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

உதவி சுற்றுலா அலுவலர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான பட்டியல் வெளியிடப்படும். அதேபோல், குரூப்-1-சி தேர்வின் கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத்தேர்வு முடிவை உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிட முடியவில்லை. தேர்வு முடிவை வெளியிட சட்ட ரீதியிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory