» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நண்பகலில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுப்படுத்த கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!

திங்கள் 17, மார்ச் 2025 8:08:17 PM (IST)



நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணிவரை அனைத்து தூய்மை பணியாளர்களையும் துப்புரவு பணிக்காக ஈடுப்படுத்த கூடாது என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் வெப்ப அலை காரணமாக ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆட்சியர், கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு இருக்குமென்பதால், அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வெப்ப அலையினால் பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

மாவட்டத்திற்குட்பட்ட பேருந்து நிலையங்கள், சந்தை பகுதிகள், சுற்றுலா தளங்கள், பள்ளிகள், கல்லூரிகள் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்து, ORS தண்ணீர் வைக்க வேண்டும். வெப்ப அலைகளின் தாக்கங்கள் குறித்து ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமிய கலைக்குழுக்களை கொண்டு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களை காலை 11 மணி முதல் 11.45 வரை துஸய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணிவரை தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். 

மேலும் அவர்களுக்கு தேவையான கையுறை, தொப்பி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வழங்க துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 12ம் வகுப்பு மற்றும் 11ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களை வெயிலில் நிற்க அனுமதிக்க கூடாதோடு, மதிய உணவு அருந்திய பின் வெப்ப அலை அதிகமாக இருப்பின் மாணவ மாணவியர்கள் விளையாட செல்வதை தவிர்க்க வேண்டும். 

மேலும் அவர்களை தரையில் அமர வைக்கவும் கூடாது. வரும் நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், மதியம் நேரங்களில் ஊர்வலம் செல்வதை தவிர்ப்பதோடு, காலணி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்ந்து வெப்ப அலை காரணமாக ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து விளம்பர பதாகைகள் வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலெட்சுமி, இணை இயக்குநர் மருத்துவம் சகாய ஸ்டிபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் இராமலிங்கம், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory