» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கியும் போராட்டம் எதற்கு? மத்திய அமைச்சர் கேள்வி
சனி 27, ஜூலை 2024 4:46:01 PM (IST)
'மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழக ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் திமுக போராட்டம் நடத்துகிறது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நடந்த பட்ஜெட் குறித்த சிறப்பு கலந்தாய்வு கூட்டத்தில், ஜிதேந்திர சிங் பேசியதாவது: மத்திய அரசு வழங்கி உள்ள திட்டங்களை பயன்படுத்தி கொள்ளாமல் தமிழக அரசு பொறுப்பற்றதாக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கானது இந்தாண்டு பட்ஜெட். இந்த பட்ஜெட் எதிர்கால முன்னேற்றத்திற்கானது. முத்ரா கடன் வரம்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது. இது சிறு, குறு தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
பிரதமர் தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை, நிதிகளை கொடுக்கிறார். பிறகு எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள்?. பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்கு வளர்ச்சி அடையும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்திற்கு ரயில்வேக்கு அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்?
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்? பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். பிரதமர் தமிழ் மக்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் நேசிக்கிறார். அவருக்கு தமிழகம் என்றால் மிகவும் பிடிக்கும், அவர் இதயத்தில் தமிழகத்துக்கு தனி இடம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.