» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது: சீமான் பேட்டி
செவ்வாய் 7, மே 2024 5:28:21 PM (IST)
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது "நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். வட இந்தியாவில் நீட் தேர்வெழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தியை அகற்றச்சொல்வதில்லை. தமிழகத்தில்தான் நீட் தேர்வெழுத வரும் மாணவர்களின் காதணி போன்றவற்றை அகற்றச்சொல்கின்றனர்.
இந்தியாவில் தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? இந்தியாவில் நிறுவனங்கள் இல்லையா? ஏன் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும்? மூக்குத்தியில் கூட 'பிட்' அடிப்பார்கள் என கழற்ற சொல்கிறார்கள்; ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என அவர்களே சொல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், கல்வியா வீரமா செல்வமா? என மறுபடியும் சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும் என்றும் இயல், இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என அப்போதே பாடி விட்டனர். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல். அதை மறுக்கவே முடியாது.
இது இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சனை. இதற்கு இடையே எங்களை கோர்த்து விடாதீங்க, அவர்கள் இதுதொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இளையராஜா அப்பா கேட்கும் காப்புரிமை கோரிக்கை என்பது நியாயமான ஒன்று, அதை புரியாமல் பலரும் அவரை விமர்சிப்பது தவறான செயல் எனக் கூறியுள்ளார்.