» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் வன்முறைத் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

வெள்ளி 26, மே 2023 4:24:12 PM (IST)

"கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது. இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித் துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. வருமான வரித் துறையினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தமிழக காவல் துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்தபோது, உடனடியாக காவல் துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

வருமான வரித் துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வருமான வரித் துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory