» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய பைக் வாங்குவதற்காக மூதாட்டியை கொன்று நகை பறிப்பு - கல்லூரி மாணவர் கைது!

வியாழன் 23, மார்ச் 2023 4:37:27 PM (IST)

ராதாபுரம் அருகே புதிய பைக் வாங்குவதற்காக மூதாட்டியை கொன்று 11 பவுன் செயினை பறித்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் அருள் மிக்கேல். இவரது மனைவி உஷா(68). அருள் மிக்கேல் இறந்து விட்டதால் உஷா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் அருகே உள்ள பல்லவிளை பகுதியை சேர்ந்த சேவியர் மனைவி ஜெயா என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் உஷா தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரது உடலை பிரீசர் பாக்ஸில் வைத்தனர். அப்போது அவரது கழுத்தில் காயமும், அவரது 11 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), உஷாவை கொலை செய்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.

அந்த நேரத்தில் அங்கு வந்த ரஞ்சித்தை பிடித்து சோதனை செய்தபோது அவரது பையில் நகை அடகு வைத்த ரசீது இருந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உஷா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த ரஞ்சித் தனது நண்பரான அதே பகுதியை வினோத்துடன் (18) சென்றுள்ளார். அங்கு இருந்த உஷாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

அப்போது உஷா சுதாரித்துக்கொண்டு தடுக்க முயன்றுள்ளார். இதில் அவரது கழுத்தில் சங்கிலி குத்திக்கிழித்ததில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். உடனே நகையை எடுத்துக்கொண்டு ரஞ்சித் வெளியேறி உள்ளார். அந்த நகையை அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அந்த நகையை கடைக்கு சென்று அடகு வைக்க கொடுத்தால் சந்தேகம் வந்துவிடும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான உதய பிரகாஷ் என்பவரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். மேலும் நகையை அடகு வைத்து கொடுத்தால் பணம் தருவதாக கூறி உள்ளார். அதற்கு ஆசைப்பட்டு உதயபிரகாஷ் தனது மனைவி சுபாவுடன் சேர்ந்து நகையை வள்ளியூரில் உள்ள பிரபல நகை கடை ஒன்றில் அடகு வைத்து கொடுத்தது தெரியவந்தது.

அதேநேரத்தில் போலீசாரின் தீவிர விசாரணையில் ரஞ்சித் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து ரஞ்சித், வினோத் மற்றும் தம்பதியான உதய பிரகாஷ்-சுபா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory