» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அரசு சார்பில் நெய்தல் உப்பு விற்பனை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
சனி 13, ஆகஸ்ட் 2022 11:09:55 AM (IST)
தமிழக அரசு சார்பில் நெய்தல் எனப் பெயரிடப்பட்டுள்ள உப்பின் வெளிச் சந்தை விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில், நெய்தல் உப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியன நெய்தல் என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நெய்தல் உப்பினை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின.
அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச் சந்தை விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கு.ராசாமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.