» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலைவாய்ப்பு தரும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுரை!

புதன் 24, ஜூன் 2026 4:31:49 PM (IST)



எந்தப் பட்டப்படிப்பை முடித்தால் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்கள் சிந்தித்து, அதற்கேற்ற வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பயில வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சிகளைப் பார்வையிட்ட பின் ஆட்சியர் பேசியதாவது:

அரசு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்காகப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடனுதவிகளைப் பெற்று அதை வழக்கமான பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல், குழுவாக இணைந்து ஒரு சிறு தொழிலைத் தொடங்கி தங்களது வருமானத்தை மேம்படுத்தி ஒரு வர்த்தக அமைப்பாக மாற வேண்டும். அதேபோல், விவசாயிகள் அனைவரும் 'உழவர் உற்பத்தியாளர் அமைப்பு' (FPO) மூலம் குழுவாக இணைந்து, தாங்கள் உற்பத்தி செய்யும் மிளகு உள்ளிட்ட வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் தங்களது லாபத்தை உயர்த்த வேண்டும்.

விளாத்திகுளம் ஒரு மானாவாரி பகுதியாகும். இங்கு விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் சிறப்புத் திட்டத்தில் ஏற்கனவே 78 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் 700 நபர்களுக்குப் பண்ணைக் குட்டைகள் அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதால், தகுதியுள்ள விவசாயிகள் வேளாண் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி கற்கச் செல்ல வேண்டும். நேற்று வேப்பலோடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) ஆய்வு செய்தபோது, அங்கு இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் 99 சதவீதம் பேருக்கு நல்ல கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடிஐ, பாலிடெக்னிக் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. 

அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு இன்னும் அதிகமான தொழிற்சாலைகள் வரவுள்ளதால், மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே, அடுத்த தலைமுறையினரைத் தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்க்கப் பெற்றோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ஆட்சியர் விஷு மகாஜன் பேசினார்.

ரூ.83.50 லட்சம் நலத்திட்ட உதவிகள்:

இம்முகாமின் நிறைவாக வருவாய்த்துறை சார்பில் 32 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கூட்டுறவுத்துறை சார்பில் 20 பேருக்குக் கால்நடை பராமரிப்புக் கடனுதவிகள், தாட்கோ சார்பில் 2 பேருக்குப் பயணிகள் ஆட்டோ சாவிகள், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 50 ஆயிரத்து 951 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணக்குமார், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் சொர்ணலதா, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory