» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித சூசையப்பா் திருத்தலத்தில் நற்கருணை பவனி
திங்கள் 6, மே 2024 9:00:38 AM (IST)
கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தல திருவிழா 10ஆவது திருநாளான நேற்று நற்கருணை பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புனித சூசையப்பா் திருத்தலத் திருவிழா ஏப்ரல் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் நற்செய்தி பெருவிழா, நற்கருணை ஆசீா், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9ஆம் திருநாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பலியும், அதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சூசையப்பா் சொரூபம் தாங்கிய சப்பர பவனியும் நடைபெற்றன.
இந்நிலையில் 10ஆவது திருநாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள திருப்பலி பீடத்தில் மேல இலந்தைகுளம் பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளாா், காமநாயக்கன்பட்டி உதவிப் பங்குத்தந்தை செல்வின் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். அதில், 15 குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.
பின்னா், மாலை 6.30 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி இறையியல் கல்லூரி பேராசிரியா் அந்தோணிராஜ் அடிகளாா், கோவில்பட்டி திருத்தல உதவிப் பங்குத் தந்தை அந்தோணிராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். அதைத் தொடா்ந்து நற்கருணை பவனி நடைபெற்றது. புதுரோடு வழியாக திருத்தலத்தை பவனி வந்தடைந்தது நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது. பின்னா் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றதும்அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.