» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெப்ப அயற்சியிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!

சனி 4, மே 2024 4:39:24 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைகால வெயில் அதிகரிப்பினால் கால்நடைகளுக்கான பராமரிப்பு முறைகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல்,  அதிகமாக தண்ணீர் பருகுதல்,  பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல்,  நிழலில் தஞ்சம் புகுதல்,  வாயை திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல்  போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

வெப்ப அயற்சியிலிருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கு விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும். காலை 11மணி முதல் மாலை 4மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீரின் மீது கலப்புத்தீவனத்தை சிறிதளவு தூவும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும். 

தாது உப்புக்கலவை,  வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர்த்தெளிப்பான்கள், மின்விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும்,  இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.

கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும்,  இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள்,  பி-காம்ப்ளக்ஸ் மற்றும் குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும். ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். கோடையில்  கிடைக்கும் புரதச்சத்துமிக்க வெல்வேல், கருவேல்,  உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். செல்லபிராணிகளை  வாகனங்களின் உள்பகுதிகளில் அடைத்து வைப்பதையும் நேரடியாக வெயில் படுமாறு உலாவவிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை,  மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் 1962  என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம். மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நாடலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory