» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெரியார் தி.க., கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது: இந்து முன்னணி கோரிக்கை!!
வியாழன் 2, மே 2024 4:20:42 PM (IST)
தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகத்தின் தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மேற்கு மண்டல துணைத் தலைவர் ஆறுமுகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெரு பெல் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகே எங்களது இந்து முன்னணி அலுவலகம் செயல்படுகிறது. இன்று (02.05.2024) வியாழக்கிழமை மாலை டூவிபுரம் 5வது மெயின் ரோடு, அண்ணா நகர் 7 சந்திப்பு பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் தெருமுனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்நேரத்தில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் தெருமுனை கூட்டம் எங்கள் இந்து முன்னணி சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டமாகும்.
எனவே எங்கள் அலுவலகம் முன் நடக்கும் பெரியார் திராவிட கழக கூட்டத்தில் இந்து மதத்திற்கு எதிராகவும் இந்து மத தலைவர்களுக்கு எதிராகவும் ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அதற்கு எங்களது முழு கண்டனத்தையும் எதிர்ப்பையும் அவ்விடத்திலேயே தெரிவிப்போம் என்பதை இதன் மூலம் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், மத்தியபாகம் காவல் நிலையத்திலும் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் உடனிருந்தார்.