» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடையின் பூட்டை உடைத்து ரூ.58 ஆயிரம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
வியாழன் 2, மே 2024 3:21:25 PM (IST)
தூத்துக்குடி அருகே கடையின் பூட்டை உடைத்து ஹார்டிஸ்க் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை மெயின் ரோட்டில் பலசரக்குக் கடை நடத்தி வருபவர் விஜயகுமார் மகன் ஜெபின்ராஜ் (30). இவர் நேற்று இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை 6:00 மணிக்கு கடையை திறக்க வந்தபோது கடையில் உள்ள ஷட்டர் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் கடை முன்பு பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. 3 கேமராக்கள் திசை மாற்றி வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த கேமரா கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க், கல்லாவில் இருந்த ரூ.58 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஜெபின் ராஜ் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் கடையில் உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். புதுக்கோட்டையில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கடையில் திருட்டு நிகழ்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.