» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
வியாழன் 2, மே 2024 8:20:10 AM (IST)
தூத்துக்குடியில் ஆம்னி வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இளைஞரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் ரேணுகா தேவி, காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வேனை ஓட்டிவந்த தூத்துக்குடி முனியசாமி புரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாரை (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், புதியம்புத்தூா், பண்டாரம்பட்டி சுற்று வட்டாரங்களில் உள்ளவா்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மாட்டுக்கு தீவனமாக விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 21 மூட்டைகளில் இருந்த சுமாா் ஒரு டன் அரிசியையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடா்பாக தாதன்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன் என்பவரைத் தேடி வருகின்றனர்.