» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
வியாழன் 25, ஏப்ரல் 2024 7:44:44 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 13.11.2023 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை சுடலை மாடசாமி கோவில் பகுதியில் வைத்து மணக்கரை கீழூர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் மணி (60) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் மணக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த துரைபாண்டி மகன் பேச்சிமுத்து (எ) பாயாசம் பேச்சிமுத்து (48) என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த 24.03.2024 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் சாமிநகர் பகுதியில் வைத்து முள்ளக்காடு ராஜீவ் நகரைச் சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (53) என்பவரை கொலை செய்த வழக்கில் முள்ளக்காடு ராஜீவ் நகரைச் சேர்ந்த சேசு என்பவரது மகன்களான சதீஷ்குமார் (26) மற்றும் சுதாகர் (28) ஆகிய இருவரையும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான 3பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்தரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் பேச்சிமுத்து (எ) பாயாசம் பேச்சிமுத்து என்பவரை மதுரை மத்திய சிறையிலும், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார் சதீஷ்குமர் மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும அடைத்தனர்.