» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு வெட்டு: 7 பேர் கைது
புதன் 17, ஏப்ரல் 2024 8:34:21 AM (IST)
தூத்துக்குடியில் 2 வாலிபர்களை அரிவாள், கத்தியால் தாக்கிய 7பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆதித்யன் என்ற ஆதி (22). இவரும், இவருடைய நண்பர் அஜய் (19) என்பவரும் மாப்பிள்ளையூரணி வ.உ.சி நகரில் வைத்து மது குடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது, சுந்தரவேல்புரத்தை சேர்ந்த அருண்குமார் (21) என்பவர் அங்கு வந்து பிரகாஷ் என்பவரை பற்றி விசாரித்தாராம். அப்போது, பிரகாஷ் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்று கூறினார்களாம்.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் தனது நண்பர்களை வரவழைத்து உள்ளார். இதனால் அருண்குமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் திரவியராஜ் என்ற ராஜூபாய் (24), சுடலைராஜ் (25), கரண் (22), சந்திரன், ஜீவா என்ற ஜீவானந்தம், குணா என்ற குணசேகரன் (24) சக்திவேல் (21), முத்து கிருஷ்ணன் (19) ஆகியோர் சேர்ந்து ஆதித்யன் என்ற ஆதி, அஜய் ஆகிய 2 பேரையும் அரிவாள், கத்தியால் தாக்கி மிரட்டி உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அருண்குமார், திரவியராஜ் என்ற ராஜூபாய், சுடலைராஜ், கரண், குணா என்ற குணசேகரன், சக்திவேல், முத்து கிருஷ்ணன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.