» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி: முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்
சனி 13, ஏப்ரல் 2024 8:10:54 PM (IST)
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தெரிவித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட கழகசெயலாளர்கள், ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தேவர்புரம் சாலையில் உள்ள அதிமுக தலைமை தேர்தல் காரியாலயத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மற்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி சண்முகநாதன் இனி வரும் தினங்களில் நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். வீடு வீடாக சென்று விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்சாரகட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிதண்ணீர் வரி உயர்வு, பத்திர பதிவு உயர்வு மற்றும் விடியா திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த நீட் தேர்வு ரத்து , சிலிண்டருக்கு ரூ.100 மானியம் , அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், என்ற பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.
எடப்பாடியார் ஆட்சியையும் மக்கள் பார்த்துவிட்டனர், விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியையும் மக்கள் பார்த்து விட்டனர், மக்கள் விடியா திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் எனவே நாம் மக்களை எளிதில் சந்தித்து வாக்கு கேட்கலாம் ஆனால் திமுகவினர் வாக்கு கேட்கும்பொழுது மக்கள் கேட்கும் கேள்விக்கு அவர்களில் பதில் கூற முடியாத நிலைமையில் தான் உள்ளனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.
திமுகவை பொருத்தவரை இப்போது வரை யார் பிரதமர் வேட்பாளர் என்று திமுகவும் ,காங்கிரசும் மக்களிடம் தெரிவிக்காமல் வாக்கு கேட்டு வருகின்றனர். எனவே நாம் அனைவரும் அதிமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் சிவசாமி வேலுமணி வெற்றி பெறுவதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றார்.