» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.17 முதல் 19 வரை மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு!
சனி 13, ஏப்ரல் 2024 7:50:34 PM (IST)
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள், மற்றும் பார்களை மூட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், "பாராளுமன்ற பொதுத் தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் அனைத்து FL2, FL3 உரிமதலங்கள் ஆகியவை 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், வருகிற 16-ந் தேதி வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் அன்று மட்டும் மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தினங்களில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.