» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் மேலாண்மைக் குழுவின் பொறுப்பு அலுவலர்கள் பணிகள்: ஆட்சியர் ஆலோசனை
சனி 13, ஏப்ரல் 2024 7:19:45 PM (IST)
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் மேலாண்மைக் குழுவின் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் - 2024ஐ முன்னிட்டு, 36.தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, அன்றைய தினம் வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் பிற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய புகார்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அமைக்கப்படவுள்ள ஊடகக் கட்டுப்பாட்டுப் பிரிவு, வலைதள கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (13.04.2024) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 19.04.2024 அன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க பறக்கும் படைக் குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் பிற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கவும் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊடகக் கட்டுப்பாட்டுப் பிரிவு, வலைதள கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளை ஒருங்கிணைத்து தேர்தல் மேலாண்மைக் குழு செயல்படவுள்ளது. இப்பிரிவுகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்றையதினம் பொறுப்பு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இன்று அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1624 வாக்குச்சாவடி மையங்களில் (288 பதற்றமான வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும்) 65 சதவிகிதம் அதாவது 1057 வாக்குச்சாவடி மையங்களில் வலைதள கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செயல்படவுள்ள வலைதள கட்டுப்பாட்டுப் பிரிவு மூலமாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலவலகக் கட்டுப்பாட்டு அறையின் பிரத்யேக தொலைபேசி எண்களுக்கு வரும் புகார்களையும், ஊடகங்கள், இணையதளங்கள் வாயிலாக வரக்கூடிய புகார்களையும் மற்றும் வலைதள கேமரா பதிவுகளையும் கண்காணித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, 213.விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அவர்களும், 214.தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உதவி இயக்குநர் (புள்ளியியல்), தூத்துக்குடி அவர்களும், 215.திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உதவி இயக்குநர் (மீன்வளம்- துறைமுகம்), தூத்துக்குடி அவர்களும், 216.ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு துணை இயக்குநர் (தோட்டக்கலை), தூத்துக்குடி அவர்களும், 217.ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உதவி இயக்குநர் (மீன்வளம்), தூத்துக்குடி அவர்களும், 218.கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.