» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் எஸ்.ஐ., போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை!
புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)
வீரவநல்லூர் அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இறந்த வழக்கில் வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தங்கபாண்டியன் பணியாற்றி வந்தார். புளியங்குடி போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் போலீஸ்காரராக இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு நெல்லையில் இருந்து அம்பை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வீரவநல்லூர் அருகேயுள்ள தனியார் ஆலை அருகில் வந்தபோது, அவர்களது மோட்டார் சைக்கிளும், சேரன்மாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் வேலியார்குளம் பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி (50) ஓட்டி வந்த வேனும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் தங்கபாண்டியன், மாரியப்பன் ஆகியோர் இறந்தனர். இதுதொடர்பான வழக்கு சேரன்மாதேவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ராஜலிங்கம் விசாரித்து, வேன் டிரைவர் கருத்தபாண்டிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.