» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்த இளைஞர்கள்- பொதுமக்கள் பாராட்டு
வியாழன் 29, ஜூலை 2021 8:48:32 PM (IST)
திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வசவப்பபுரம் சோதனை சாவடி அருகே சாலையில் இருந்த பள்ளத்தை இளைஞர்கள் சீரமைத்தனர்.
திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வசவப்பபுரம் சோதனை சாவடி முன் சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு அரண் மீது மோதி தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் காவல்துறை அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் தற்போது வரை சாலையில் உள்ள பள்ளம் சரி செய்யப்படவில்லை. இந்த பிரச்சினையை சரி செய்ய உடனடியாக களத்தில் இறங்கியது பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு.
நேற்று இரவு 12 மணியளவில் பசுமை தமிழ் தலைமுறை சேர்ந்த இளைஞர்கள் தார் கலவை கொண்டு பள்ளத்தை நிரப்பி சாலையை சீரமைத்தனர். இந்த நற்செயலை செய்த பசுமை தமிழ் தலைமுறை அமைப்பினரை முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்கள்.இந்நிகழ்வின் போது பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் தலைவர் சுகன் கிறிஸ்டோபர், பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் பூல்பாண்டி ஆகியோர் முன்னிலையில் சாலையை சீரமைத்தனர். இவர்களுக்கு உதவியாக முறப்பநாடு காவல்துறை அதிகாரிகள்,தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் மற்றும் வல்லநாடு இளைஞர்கள் பலர் உடனிருந்தனர்.