» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:41:34 PM (IST)

Imrankhanletter.jpg

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என இந்தியா உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பிற்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவரான இம்ரான் கான் (73), ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததால், இம்ரான் கானின் வலது கண்ணில் சுமார் 85% பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் அண்மையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட இம்ரான் கான், உடனடியாக மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். 

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்கசர்க்கர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அரசியல் சார்பற்ற கோரிக்கை: "நாங்கள் எந்தவொரு அரசியல் பின்புலத்திலிருந்தும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை; கிரிக்கெட் பயணத்தின் அடிப்படையில் மட்டுமே இதைக் கேட்கிறோம்."

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் மூலம் இம்ரான் கானின் கண் பார்வை இழப்பிற்கு உடனடியாக உயர்தரச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைச் சந்திக்கத் தடையின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்திலும் இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்கக் கோரி 14 சர்வதேச கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory