» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒட்டிப் பிறந்த சகோதரிகளுக்குத் தனித்தனி தேர்வறை: எஸ்பிஐ தேர்வில் எழுந்த வினோதச் சிக்கல்!

வெள்ளி 24, ஜூலை 2026 10:15:50 AM (IST)

veenavanitwins.jpg

ஐதராபாத்தில் தலையோடு தலை ஒட்டிப் பிறந்த வீணா - வாணி சகோதரிகளுக்கு, ஸ்டேட் வங்கி தேர்வு எழுதத் தனித்தனியாகத் தேர்வறைகள் ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி வீணா - வாணி என்ற இரட்டைச் சகோதரிகள் தலையோடு தலை ஒட்டிப் பிறந்தனர். வறுமை மற்றும் பராமரிக்க இயலாத சூழ்நிலை காரணமாகப் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர்களை, ஐதராபாத் நீலோபர் அரசு மருத்துவமனை பல ஆண்டுகள் பராமரித்து வந்தது. பின்னர் அமிர்பேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தனர்.

இவ்விருவருக்கும் தலைப்பகுதியில் முக்கிய இரத்த நாளங்கள் இணைந்துள்ளதால், அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்து எனக் கூறி மருத்துவர்கள் பிரிப்பதைத் தடுத்துவிட்டனர். இதனால் இருவரும் இணைந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாதனைக் கல்விப் பயணம்:

உடல் ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், பள்ளிப்படிப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து பி.காம் (Business Analytics) பட்டப்படிப்பைச் சிறப்புடன் முடித்த இவர்கள், தற்போது சார்ட்டட் அக்கவுண்டன்ட் (CA) ஆவதற்காகத் தீவிரமாகப் படித்து வருகின்றனர்.

தலையோடு தலை ஒட்டிப் பிறந்துள்ளதால், தேர்வு எழுதும்போது இருவராலும் ஒரே நேரத்தில் குனிந்து கேள்வித் தாளையோ, விடைத் தாளையோ பார்க்க முடியாது. ஒருவருக்கு ஒருவர் சூழ்நிலைக்கு ஏற்ப உடலைச் சாய்த்துக்கொண்டே மாற்றி மாற்றியே தேர்வு எழுதுவார்கள். இத்தகைய கடினமான நிலையிலும், அரசு வழங்கிய கூடுதல் நேரச் சலுகையைக் கூட மறுத்து, சாதாரண மாணவர்களைப் போலக் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) போட்டித்தேர்விற்கு வீணா - வாணி இருவரும் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு எழுதத் தகுதி பெற்ற இவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியானது. ஆனால், அதில் இருவருக்கும் தனித்தனி தேர்வறைகளும், தனித்தனி இருக்கைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஒட்டிப்ப பிறந்த இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அறைகளுக்குச் சென்று தேர்வு எழுதுவது சாத்தியமற்றது என்பதால், இம்மாணவிகள் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக்கை: இதுகுறித்துத் தகவலறிந்த அவர்களின் முன்னாள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், "வீணா - வாணி இருவரும் ஒரே அறையில் அமர்ந்து தேர்வு எழுத வங்கி நிர்வாகம் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின் கீழ், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு மையத்தை மாற்றி அமைக்க வேண்டும்" எனச் தேர்வு நடத்தும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory