» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் கூட்டாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளதையொட்டி, இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் பங்கேற்றனர்.
சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் காணொலி (Video Conference) வாயிலாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
முக்கிய ஐந்து அம்சங்கள்:
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது:
இக்கூட்டத்தில் மொத்தம் 23 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அதில் மிக முக்கியமான 5 அம்சங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
வாக்கு திருட்டுப் புகார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (SIR) நடைபெற்ற வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விரைவில் புகார் கடிதம் அளிக்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துறை குளறுபடிகள்: நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டு குளறுபடிகளால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
கூட்டணி ஒருங்கிணைப்பு: இண்டியா கூட்டணியின் செயல்பாடுகளை வலுப்படுத்த இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டணிக் கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து செயல்படும்.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 23 கூட்டணிக் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர் என்று மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!
சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

21-வது நாள் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் : சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி!
சனி 18, ஜூலை 2026 12:40:37 PM (IST)








