» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும்: இபிஎஸ் சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை
புதன் 26, மார்ச் 2025 11:25:23 AM (IST)

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். கடந்த மாதம் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக டெல்லியில் திறந்துவைத்த அதிமுக அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், மு.தம்பிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பழனிசாமி டெல்லி சென்றிருப்பது குறித்து நேற்று பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், `எதிர்க்கட்சி தலைவர் யாரைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது' என்று தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருந்த பழனிசாமி, கடந்த மக்களவைத் தேர்தலை பாஜக இல்லாமல் சந்தித்தார். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. ஆனால், தேர்தலுக்கு முன்பே அதிமுகவின் 2-ம் கட்டத் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர தொடர்ந்து விருப்பம் தெரிவித்திருந்தனர்.
தேர்தல் முடிவுக்கு பின்னர், `தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கணிசமான இடங்களைப் பெற்று இருக்கலாம்' என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், வலுவான கூட்டணியை அமைக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
பாஜகவின் தேசிய மற்றும் மாநிலத் தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், அதிமுகவின் 2-ம் கட்டத் தலைவர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கலாம் என்று பழனிசாமியிடம் தெரிவித்து வருகின்றனர். அதனால் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்ததும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம், கூட்டணி மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக அவர்கள் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா - ராகுல் மீது குற்றப்பத்திரிகை: காங்கிரஸ் கண்டனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:33:13 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்!
புதன் 16, ஏப்ரல் 2025 3:39:02 PM (IST)

என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)

காருக்குள் சிக்கிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி: தெலுங்கானாவில் சோகம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:33:37 AM (IST)

அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!
திங்கள் 14, ஏப்ரல் 2025 11:48:50 AM (IST)

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு : உள்துறை அமைச்சகம் திட்டம்?
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:41:30 PM (IST)
