» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த நிதீஷ் குமார்!
சனி 27, ஜூலை 2024 12:47:11 PM (IST)
நீதி ஆயோக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்ள மாட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறும் நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் மாநிலத்தில் சார்பில் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்துகொள்ளவில்லை, பிகார் பிரிநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பிடிஐயிடம் தெரிவித்தார். மேலும், பிகாரைச் சேர்ந்த நான்கு மத்திய அமைச்சர்களும் நீதி ஆயோக்கில் உறுப்பினர்களாக பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நீதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நீதி ஆயோக் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.