வாரத்தில் 5 நாட்கள் பணி முறையை அமல்படுத்தக் கோரி வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

9 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்த ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

• 5 நாட்கள் பணி கோரிக்கை: வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை கடந்த 2024 மார்ச் 8-இல் நடந்த இருதரப்பு கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஏற்றுக்கொண்டது. அதற்குப் பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பணிநேரத்தை 40 நிமிடங்கள் அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

• மத்திய அரசின் தாமதம்: இதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

• செயல்திறன் ஊக்குத்தொகை எதிர்ப்பு: 4-ஆம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்குத்தொகை திட்டத்தையும் சங்கங்கள் எதிர்த்துள்ளன.

தொடர் போராட்டங்கள் அறிவிப்பு:

செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது:

1. செப்டம்பர் 28 முதல்: 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம்.

2. அக்டோபர் 26 முதல்: காலவரையற்ற வேலைநிறுத்தம்.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு:

செப்டம்பர் 11 (வியாழன்) அன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், அதனைத் தொடர்ந்து:

• செப்டம்பர் 12 (சனி): 2-வது சனிக்கிழமை விடுமுறை

• செப்டம்பர் 13 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

• செப்டம்பர் 14 (திங்கள்): விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை

எனவே, செப்டம்பர் 11 முதல் 14 வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.