தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை அவமதிப்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசியக் கௌரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்டத்திருத்த மசோதா 2026-க்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மாசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலுக்கு இணையான சட்டபூர்வப் பாதுகாப்பு தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கும் கிடைத்துள்ளது.
தேசியக் கொடி, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசிய கீதம் போன்ற தேசியச் சின்னங்களுடன் 'வந்தே மாதரம்' பாடலும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது அல்லது அவமதிப்பது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
இனி அரசு மற்றும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் 'ஜன கண மன' பாடப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்படும். வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அரசு நிகழ்ச்சிகளில் இப்பாடலின் 6 சரணங்களும் முழுமையாகப் பாடப்படும்.
வரும் ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், முதன்முறையாக 'வந்தே மாதரம்' முழுமையாகப் பாடப்பட்ட பின்னரே தேசிய கீதம் பாடப்படவுள்ளது குறிப்பிடத் தக்கது.

